Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாடு விரைவில் திவால் ஆகும்: நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார்

செப்டம்பர் 17, 2019 02:24

திருவள்ளூர்: மத்திய பாஜக அரசை கண்டித்தும், பா.சிதம்பரம் கைது செய்யப்பட்டதின் சூழ்ச்சியை கண்டித்தும் ஆவடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

 திருவள்ளூர் தெற்கு வடக்கு மற்றும் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த கண்டன பொதுக்கூட்டத்திற்கு திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் எம்.பி., காங்கிரஸ் செயல் தலைவர் தலைமையேற்றார். 

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக 
அகில இந்திய பொது செயலாளர் முகுல் வாஸ்னிக் மற்றும்  தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ்.அழகிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேடையில் திருவள்ளுவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் பேசுகையில், நீதிமன்றங்களே பா.சிதம்பரத்தை கைது செய்தது சரிதானா? சிதம்பரத்தை கம்பிக்கு பின்னால் அனுப்பியது நீதி தர்மமா? நீதிமன்றங்கள் இதுவரை கொடுத்த தீர்ப்புகள் சரிதானா என்று நீதிபதிகள் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என ஆவேசமாக பேசினார். 

அவரைத் தொடர்ந்து பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ்.அழகிரி நாடு திவால் ஆகிக்கொண்டிருக்கிறது. ரிசர்வ் வங்கியில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி உபரி நிதி இருந்தது. ப.சிதம்பரத்தால் உருவாக்கப்பட்ட நிதி அது. அதை அவர் சிக்கனமாக வைத்திருந்தார். அந்த உபரி நிதி எதற்கு என்று சொன்னால், உபரி நிதி மூன்று காரணங்களுக்காக தான் செலவிடப்படும். 

ஒன்று நாட்டில் பஞ்சம் வந்தால் செலவிடப்படும் அல்லது நாட்டில் யுத்தம் வந்தால் அல்லது இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் அதனுடைய மதிப்பு அதிகமாகப் போனால் அப்போது அந்தப் பணத்தை மார்க்கெட்டில் சம படுத்துவார்கள். 

இந்த மூன்று காரணங்களுக்காக தான் உபரி நிதி செலவிடப்படும். ஆனால் எதற்காக இவர்கள் எடுத்திருக்கிறார்கள் என்றால் அன்றாட செலவுகளுக்காக எடுத்திருக்கிறார்கள்.
 அந்த உபரி நிதியானது வீணாகிக்கொண்டிருக்கிறது. இதனால் நாடு விரைவில் திவால் ஆகும் என கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கே.எஸ்அழகிரி பேசுகையில், அமித்ஷாவின்  இந்தியா ஒரே நாடு ஒரே மொழி என்கிற முழக்கத்தை முன் வைத்திருக்கிறார். அது பார்ப்பதற்கு நன்றாக இருப்பதைப் போல தோன்றும் ஆனால் இந்தியா என்பது ஒரு தேசம் அதனுள் 29 நாடுகள் இருக்கின்றன. 7 துணை நாடுகள் இருக்கின்றன.

 எனவே இந்தியாவில் இருக்கின்ற 29 நாடுகளும் ஒன்றாக முடியாது. தேசம் என்பது வேறு நாடு என்பது வேறு.இந்த 29 நாடுகளில் ஏராளமான மாற்றங்கள் இருக்கின்றன. மொழி, உணவு, உடை, கலாச்சாரம், இறைவழிபாடு மாற்றம் இருக்கிறது. 

எனவே இது ஒன்று என்று சொல்வது தவறான வாதம். ஒரே நாடு ஒரே மொழி என்று சொன்னால் எப்படி ஒரே மொழியாக இருக்க முடியும். இந்தி பரவலாக பேசக் கூடிய மொழியாக இருக்கலாமே ஒழிய எல்லோரும் பேசக்கூடிய மொழி அல்ல. ஏராளமான மொழி பேசக்கூடியவர்கள் இந்த நாட்டிலே இருக்கிறார்கள். 

எனவே நாட்டில்  மொழிப்பிரச்சினையை  நீங்கள் கொண்டு வரக்கூடாது அது தவறாக முடியும் என்றார்.

தலைப்புச்செய்திகள்